Skip to main content

பெண்களும் புலிகளும் ❤️💛

விடுதலை புலிகள் இயக்கத்தின் காட்டுப்பாட்டின் கீழ் இருந்த தமிழீழ மண்ணில் பெண்களுக்கு இருந்த சுதந்திரம் பற்றி நிறைய செய்திகள் நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்க வாய்ப்புண்டு.
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக விடுதலை புலிகள் இயக்கம் மக்களை பெண் விடுதலை சார்ந்து அரசியல்ப்படுத்தும் நடவடிக்கையையும் தீவிரமாக முன்னெடுத்து வந்தார்கள்.  அந்த அரசியல்படுத்தலின் ஒரு சான்றாக, ஒரு இளம் பெண்ணின் மீது 91ஆம் ஆண்டு ஈழத்தில் ஒரு இளைஞனால் நடத்தப்பட்ட ஒரு வன்முறை செயலை புலிகள் எப்படி தண்டித்தார்கள். அந்த வன்முறையின் வேர் வரை சென்று அந்த ஆணாதிக்க திமிரை பற்றிய அவர்களது நிலைப்பாடை எப்படி முன்வைத்தார்கள் என்பதை கீழே நான் பதிவிட்டுருக்கும் விடுதலை புலிகள் இயக்கத்தின் அன்றைய ஒரு ஊடக செய்தியின் வழியாக நீங்கள் நேரடியாகவே படித்து தெரிந்து கொள்ளலாம்..

பெண்கள் மீதான வன்முறை புலிகளின் நிலைப்பாடு -தை 1991

இளைஞன் ஒருவன் நடுவீதியில் வைத்து ஒரு இளம் பெண்ணை அடித்த குற்றச்செயல் தொடர்பாக இங்கே எமது நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகின்றோம்.

21-11-1991 அன்று மக்கள் நடமாட்டம் மிகுந்த காலை வேளை, கொக்குவில் பகுதியில் இளம்பெண்ணொருவள் நடுவீதியில் வைத்து இளைஞன் ஒருவனால் தாக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த மறு நாள் அவ் இளைஞன் தமிழீழக் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்கப்பட்ட இளம் பெண்ணின் செவிப்பறையிலிருந்து இரத்தம் கசிந்துள்ளதாகவும், முகம் வீங்கியிருந்ததாகவும், மருத்துவ அறிக்கை கூறுகின்றது. 

மிதிவண்டியொன்றில் சென்று கொண்டிருந்த இந்த இளம் பெண்ணை தனது மிதிவண்டியைக் கொண்டு வழிமறித்த அந்த இளைஞன் கடும் சொற்களைப் பயன்படுத்தியபடி அப்பெண்ணின் முகத்தை குறியாகக் கொண்டு பல தடவைகள் தாக்கியுள்ளார். அதன் பின்னர் ஒரு 'வெற்றி வீரனைப்போல' 'களத்திலிருந்து' நேராக அப்பெண்ணனின் வீட்டிற்கே சென்று துணிவுடன் பெண்ணின் தந்தையை வெளி வாசலுக்கு அழைத்து 'உனது மகளை நான் தண்டித்துள்ளேன் ' என்று கூறிவிட்டுச்சென்றுள்ளார். 

முதியவரான அந்த அப்பாவித் தந்தை தமிழீழ காவல்துறையின் யாழ். பணிமனைக்குச்சென்று முறையிட்டதைத் தவிர வேறெதுவும் அவரால் செய்யமுடியவில்லை.

திமிர்த்தனம் கொண்ட இவ்வன்முறையை மிகமோசமானதொரு குற்றச்செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம். 

இக்குற்றச் செயலில் ஈடுபட்ட இளைஞன் 27 வயது நிரம்பிய பல்கலைக்கழக வைத்தியபீட மாணவனாகும். இளம் பெண் 18 வயது நிரம்பிய மாணவியாகும். இருவருடைய வாக்குமூலத்தின் படியும் அவர்களுக்கிடையில் எந்த வித உறவுமுறையுமில்லை தொடர்புகளுமில்லை. 

அந்த இளைஞன் சொல்கின்றான் 'ஒரு தனியார் கல்வி நிறுவனமொன்றில் வைத்து கடந்த இரண்டு மாதகாலமாக அந்த மாணவியைத் தெரியும், ஆனால் கதைத்துப்பழகவில்லை'..என்று 

அந்த மாணவி சொல்கின்றாள், 'எனக்கு ஒரு சில நாட்களாகத் தான் இந்த இளைஞனைத் தெரியும். அதுவும் என்னை அடிக்கடி பின் தொடர்வதால் தான் அது கூடத் தெரியும். மற்றப்படி ஒரு தடவை கூட அந்த இளைஞனுடன் கதைத்தது கிடையாது.

என்ன காரணம்?

அப்படியாயின் இவ்வன்முறையில் இவ்இளைஞன் ஈடுபட என்ன காரணம்?
அப்பெண்ணை அவமானப்படுத்தி பழிவாங்கி ஆத்திரத்தை தீர்ப்பது தான் அவனது நோக்கம்.

ஆண் என்ற பலம்
பொருளாதாரத்திமிர்
பண்படாத சிந்தனை
பெண்கள் தொடர்பான இழிவான பார்வை
சமூக அந்தஸ்தில் உயர்ந்தவன் என்ற கர்வமும்
ஒன்று சேர்ந்து உச்சநிலையடைய தனது வலைக்குள் அகப்பட மறுத்த அந்த இளம்பெண்ணை அவமானப்படுத்தி பழிவாங்க தீர்மாணித்து நடுவழியில் தனது கோழைத்தனத்தை காட்டினான்.

குறித்த அந்த இளைஞன் அவ் இளம் பெண்ணை தன்வசம் ஈர்க்க முயன்றிருக்கின்றான். அதற்கான அறிகுறிகளை அநாகரிகமான முறைகளில் வெளிப்படுத்தியிருக்கின்றான். அதை அவ் இளம்பெண் தனது சொந்த விருப்பு வெறுப்பு சுயமரியாதைக்கு அமைய நிராகரித்திருக்கின்றாள். இப்படிச் செய்ய அவ் இளம் பெண்ணுக்கு உரிமையும் இருக்கின்றது, சுதந்திரமும் இருக்கின்றது.

ஆனால் அவ்விளைஞ்சனால் இதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை, ஜீரணிக்கவும் முடியவில்லை. அவனிடம் மிக மிகப் பிற்போக்கான சிந்தனைகள் இருந்திருக்கின்றன. பெண்கள் தொடர்பாக மிக இழிவான பார்வை அவனிடம் இருந்திருக்கின்றது.

"கல்வியில் மேல்நிலையும், பண பலமும் ஒருங்கு சேர்ந்த சமூக அந்தஸ்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இளைஞனாகிய எனது சுட்டு விரல் அசைவிற்காக இளம் பெண்கள் ஏங்கி நிற்க வேண்டிய இந்த சமூகத்தில் யார் இவள்? என்னை அலட்சியம் செய்வது!!" என்று குமுறியிருக்கின்றான். என்னை போன்ற ஒரு ஆணின் விருப்பத்தை நிராகரிக்கும் உரிமை எந்த ஒரு பெண்ணிற்கும் இல்லை எனத் திடமாக நம்பினான். எனவே இது எனது கௌரவத்திற்கும் அந்தஸ்திற்கும், ஆண்மைக்கும் விடப்பட்ட சவால் என ஆத்திரப்பட்டிருக்கின்றான்.

எனவே அப்பெண் தண்டிக்கப்பட்டேயாகவேண்டும் என்று முடிவெடுக்கின்றான்.

இத் "தண்டனை" மூலம் தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ளவும், அவ் இளம் பெண்ணை அவமானப்படுத்தவும், பழிவாங்கவும் முடிவு செய்தான்.

அதன் பொருட்டு சட்டத்தையும் ஒழுங்கையும் தனது கையில் எடுத்து கொண்டு, மிதிவண்டியிலேறிச்சென்று, அவ் இளம் பெண்ணை நடுவழியில் மறித்து, பலர் முன்னிலையில் தாக்கியிருக்கின்றான்.

ஒடுக்கமுறை பேணமுயற்சி.

இது ஒன்றும் புதியதுமில்லை, இது தான் காலம் காலமாக நடந்து வருகின்றது என சிலர் நியாயம் கூறலாம்.

அதுவும் உண்மை தான். இப்படித்தான் எமது பெண்ணினம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆணாதிக்க அடிமைத்தளைகளால் கட்டப்பட்டு கூனிக்குறுகி வாழ்ந்து வருகின்றது. அது தான் சமூக வழக்கமாகவும் பேணப்படுகின்றது. சமூக நீதியாகவும் போற்றப்படுகின்றது. அதையே இன்றைய எமது சந்ததியும் தொடர விரும்புகின்றது.

இவற்றை எதிர்க்க விரும்பிய அல்லது இந்த இழிநிலையிலிருந்து ஒரு மாறுதலைக்காண விரும்பிய பெண்களை - இதே சம்பவத்தைப் போன்று தான்- அவமானப்படுத்தி, தூசித்து, வேண்டுமானால் உடல் பலத்தையும் பயன்படுத்திக்கட்டுப்படுத்தி அவர்களை எமது ஆணினம் அடக்கியே வைத்திருக்க விரும்புகின்றது.

ஆனால் இந்த மண்ணில் ஒரு விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தேசிய எல்லைகளை விடுவித்து அங்கே ஆண்-பெண் சமத்துவத்தை பேணும், மனிதனை மனிதன் மதிக்கும் ஒரு புதிய புரட்சிகர சமூகத்தைப் படைக்க புலிகளாகிய நாங்கள் முயன்று வருகின்றோம்.

பெண்களை இரண்டாந்தரப் பிரசைகளாகவும், ஆண்களின் தேவைகளையும், விருப்பங்களையும் ஒருதலைப்பட்சமாக நிறைவேற்றுவதற்கென்றே படைக்கப்பட்ட உயிரினமாகப்பார்க்கும் சமூகத்தின் குரூர மனோபாவத்தை உடைத்தெறிந்து இந்த சமூகத்தில், ஆண்களைப்போன்று பெண்களும் சம பாத்திரத்தை வகித்து ஒரு கௌரவத்தைப்பெற்று, சம நீதியை அனுபவிக்க வேண்டுமென நாங்கள் விரும்புகின்றோம்.

இந்த நிலையில் பெண்கள் மீதான வன்முறைப்பிரயோகத்தை நாம் அனுமதிக்கவே முடியாது!

இளைஞன் புரிந்த குற்றங்கள்

▪️அப்பெண்ணின் உரிமையையும், சுதந்திரத்தையும் மதிக்காது, மிதிக்க முயன்றிருக்கின்றான்.

▪️பெண் ஒடுக்கமுறையின் உச்சக்கட்டத்தை வெளிப்படுத்தும் காட்டுமிராண்டித்தனமான வழிமுறையை தொடர்ந்தும் பேண முயன்றிருக்கின்றான்.

▪️அப்பெண்ணை வேண்டுமென்றே அவமானப்படுத்தியிருக்கின்றான்.

▪️எதுவித காரணமும் இல்லாமல் அந்த பெண்ணை பழிவாங்க முயன்றிருக்கின்றான்.

▪️அத்துடன் தாக்கிவிட்டு அந்த இளம் பெண்ணின் வீடுதேடிச்சென்று பெண்ணின் தந்தையையும் எச்சரித்து சண்டித்தனமும் காட்டியுமுள்ளான்.

வன்முறையா பரிட்சையா?

குற்றச் செயல் நடைப்பெற்று ஒரு சில நாளில் அவ்விளைஞன் பங்குபெறும் பரிட்சை ஒன்று நடந்தது.

அப்பரிட்சையில் தோற்ற மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்கும்படி சிலர் காவல்துறைப் பொறுப்பாளருக்கும், இயக்கத்தின் தலைமைப்பீடத்துக்கும் வேண்டுகோள் விடுத்தார்கள்.

குற்றச்செயலின் தன்மையையும், அது நடந்த காலப்பகுதியையும் கருத்தில் கொண்டு அவ் வேண்டுகோள்கள் நிராகிரிக்கப்பட்டுவிட்டன.

அப்பரிட்சையானது அவ் இளைஞன் எதிர்காலம் சம்பந்தப்பட்டது என்ற கோணத்திலிருந்தே அவ்வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன.

ஆனால் ஒரு பெண்ணின் உரிமையிலும், சுதந்திரத்திலும், ஆதிக்க மனப்பான்மையுடன் குறுக்கிட்டு திட்டமிட்டு அப்பெண்னுக்கு அவமானத்தையும் உடல் காயத்தையும் ஏற்படுத்தத் துணிந்த அந்த இளைஞன் மீது அதீதமனிதாபிமானக் கண் கொண்டு பார்ப்பது எந்த வகையில் நியாயமானது?

ஒவ்வொரு ஆண்டும் நடக்கவிருக்கும் பரிட்சையில் ஒரு முறை பங்குபற்ற முடியாததையிட்டு, அவ் இளைஞனுக்காகப் பரிந்து பேசும் இவர்கள் அநீதி இழைக்கப்பட்ட அப்பெண்ணை பற்றி, அவமரியாதை செய்யப்பட்ட அவளது மனநிலையைப் பற்றி ஏன் கருத்தில் எடுக்கவில்லை?

தத்தம் மகளாக இல்லை சகோதரியாக அவமானப்படுத்தப்பட்ட அப்பெண் இருப்பாளாக இருந்தால், குறித்த அவ் இளைஞன்மீது அனுதாப பார்வை பார்ப்பார்களா? அவ் இளைஞனின் எதிர்காலத்தை பற்றி தான் சிந்திப்பார்களா?

மேல் குறித்த வேண்டுகோள்கள் எதை காட்டுகின்றது என்றால் "அந்த இளம்பெண் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதைவிட இளைஞனின் பரிட்சை மேலானது என்ற வாதத்தையேகாட்டுகின்றது.

மேலும்,

அந்த இளைஞனின் தந்தையார் உட்பட வேறு சிலர் அவ்விளம் பெண்ணின் நடத்தை மீது வீண் பழிசுமத்த முயல்கின்றார்கள். இதன் மூலம் அந்த ஆணின் குற்றச் செயலை நியாயப்படுத்த எத்தனிக்கின்றார்கள்.

ஒரு இளம் பெண்ணின் பின்னால் அலைந்து திரிந்து விட்டு தனது எதிர்பார்ப்புகள் நிறைவேறாததைக்கண்டு ஆத்திரத்தின் எல்லையைக் கடந்த அந்த இளைஞனது நடத்தைபற்றி அவர்கள் என்ன சொல்ல போகிறார்கள்?

இந்த பாரபட்சமான, அடிமைத்தனம் நிறைந்த எண்ணத்தை, சிந்தனை முறையை இனியும் மூடி மறைக்கமுடியாது.

பெண்விடுதலையும் புலிகளும் 

இறுதியாக நாம் சொல்ல விரும்புவது இது தான்.இந்தச் சம்பவத்தை ஒரு சாதாரண வாழ்வின் ஒரு சாதாரண நிகழ்வாக நாம் பார்க்கவில்லை.

எமது சமுதாயத்தில், காலங் காலமாக வேரூன்றி வளர்ந்து நிற்கும் ஆணாதிக்க வன்முறையின் ஒரு அவலட்சணமான வெளிப்பாடாகவே இந்த சம்பவத்தை நாம் பார்க்கின்றோம்.

பெண்ணினத்தின் உரிமைக்காக, கௌரவத்திற்காக, சமத்துவத்திற்காக போராடி வரும் ஒரு விடுதலை இயக்கம் என்ற வகையில் இத்தகைய சம்பவங்களை நாம் அனுமதிக்க முடியாது.

நாம் படைக்க இருக்கும் புதிய உலகத்தில் பெண்கள் எந்தவித அச்சமுமின்றி, கௌரவத்தோடு, சுதந்திரமாக இந்த சமூகத்தில் நிம்மதியாக உலாவர வேண்டும் என்பதே எமது அவாவாகும்.

இந்த இலட்சியத்தை நாம் அடைவதாக இருந்தால் பெண் ஒடுக்குமுறைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியே ஆக வேண்டும்.

இதில் எந்த அழுத்தங்களுக்கும், முணுமுணுப்புகளுக்கும் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

-விடுதலை புலிகள் இயக்கம் (தை 1991)

 







Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...