Skip to main content

மதிவதனி

'மதிவதனி'

மதி என்றால் அறிவு அல்லது நிலவு என்று பொருள், வதனி என்றால் வதனம், முகம் என்று பொருள்.

'வதனமே சந்திர பிம்பமோ?' என்ற பாடல் வரிகளை ஒரு பெயரில் அடக்க வேண்டும் என்றால் மதிவதனி என்று சொல்லலாம், ஆனாலும் 'அறிவு முகம்' என்ற விளக்கம் தான் அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன், ஏன் என்றால் மதிவதனிக்கும் கல்விக்கும் ஒரு நெருக்கம் உண்டு.

கண்ணகியும், மணிமேகலையும் காத்தருளும் நாகர்களின் உறைவிடமாம் மணிபல்லவத்தில், மிஞ்சிய ஏழு தீவுகளில் ஒன்று இன்றைய நாகதீவாக, அந்த நாகதீவுக்கு கிழக்கே குறிகாட்டி நிற்கும் புங்குடுதீவில் ஒரு ஆசிரியருக்கு பிறந்தவள் தான் மதிவதனி.

அந்த ஆசிரியர் மகள், இடம்பெயர்ந்த உறவுகளுக்கு யாழில் சிங்கள அரசால் கல்வி மறுக்கப்பட்ட போது, தன் மூன்று தோழிகளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டாள்.

அகிம்சைக்கு பலி கொடுத்த உயிர்கள் போதும் என்ற முடிவில் இருந்த ஒரு தலைவன், இந்த நாலு பெண்களில் ஒருவர் கவலைக்கிடமாக இருந்த செய்தி அறிந்து, அவன் தம்பிகளை அனுப்பி, அவர்களை காப்பாற்றினான்.

அந்த நாலு பெண்களில் ஒருத்தி பிற்காலத்தில் அவன் துணைவியாகுவாள் என்று அந்த தலைவன் அப்போது எண்ணியிருக்க மாட்டான்.

தாய்த்தமிழகத்து நாகப்பட்டினத்து கோடியக்கரையில் இருந்து நாகநாடாம் யாழ்ப்பாணத்திற்கு கால காலமாக வெளிக்கிட்ட படைமாந்தரும், பூங்குழலி போன்ற நம் கல்கியின் கதைமாந்தரும், ஈழத்தில் கண்ட முதல் முகம், வல்வெட்டித்துறைமுகம் தான்.

அந்த வல்வெட்டித்துறையில் பிறந்த பிரபாகரன் தான் தமிழினம் போற்றும் தமிழ்தேசியத் தலைவன்.

சூரர்கள் போற்றும் ஈழத்து கரிகாலன் அவன், 
மக்கள் வழிபடும் சூரியத் தேவன் அவன்.

அவன் கதிரில் பொலிவு பெற்ற மதியாகவும் பிற்காலத்தில் பெயருக்கு ஏற்ற வாழ்வை பெற்றவள் தான் எங்கள் அரசி, தலைவி மதிவதனி.

காதலை ஏற்ற இரு இதயங்களும்,

சாதியை மறுத்தது, தமிழீழத்தின் புகழ்பெற்ற சாதி மறுப்பு திருமுணம் அது. தேசியத் தலைவரின் தாய் மற்றும் தந்தையால் புறக்கணிக்கப்பட்ட அந்த திருமணம், தாய்த் தமிழகத்தின் அரவணைப்பில் நடந்தது.

இருவரது காதலின் ஆதாரமான பிள்ளை செல்வங்களுக்கு இனத்தின் விடுதலைக்காக உயிர்நீத்த போராளிகளின் பெயரை சூட்டி அழகு பார்த்தார்கள்.

காவியங்கள் பாடாத அழகியல் தேசியத் தலைவர் தலைவியின் வாழ்வியல். 
-Mr. பழுவேட்டரையர்
16/9/2018

Comments